போக்குவரத்தை நிறுத்தி நகருக்குள் இறுதி ஊர்வலம்: கோவை போலீஸ் செயல் ஒரு தவறான முன்னுதாரணம்!
போக்குவரத்தை நிறுத்தி நகருக்குள் இறுதி ஊர்வலம்: கோவை போலீஸ் செயல் ஒரு தவறான முன்னுதாரணம்!
ADDED : டிச 17, 2024 06:27 PM

கோவை: கோவையில் நேற்று மரணம் அடைந்த தொடர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா உடல், ஊர்வலமாக கொண்டு செல்ல போலீசார் அனுமதி வழங்கியது, தவறான முன்உதாரணம் என்று பா.ஜ., மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவையில் 1998ல் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. 58 பேர் உயிரிழந்தனர். 231 பேர் படுகாயம் அடைந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
'அல் உம்மா' என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அல் உம்மா அமைப்பின் நிறுவனர் பாஷா என்பவர் முக்கிய குற்றவாளி என்று அறிவித்து ஆயுள் தண்டனை விதித்தது. குண்டு வெடிப்பில் தொடர்புடைய வேறு பலரும் தண்டிக்கப்பட்டனர்.
இந்நிலையில், முக்கிய குற்றவாளியான பாஷாவுக்கு, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரியில் ஜாமின் வழங்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மரணம் அடைந்தார்.
அவரது உடல், இன்று உக்கடம் புல்லுக்காடு வீட்டில் இருந்து, வின்சென்ட் ரோடு, பெரிய கடை வீதி, குட்ஷெட் ரோடு, தேவாங்க பள்ளி ரோடு வழியாக பூமார்க்கெட் திப்பு சுல்தான் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. நான்கு கிலோமீட்டர் துாரத்துக்கு நடந்த இந்த ஊர்வலத்தில் இரு சக்கர வாகனங்களில் சென்ற ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஊர்வலம் செல்லும்போது, மாநகரில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 58 பேரை பலிவாங்கியவரின் இறுதி ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கியது, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ., மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், 'ஊர்வலத்துக்கு அனுமதி தரக்கூடாது' என்று போலீசாருக்கும், அரசுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல், அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.