வேலை செய்யவில்லை என்றால் வீட்டுக்கு போகலாம்: ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது ஐகோர்ட் கிளை கோபம்
வேலை செய்யவில்லை என்றால் வீட்டுக்கு போகலாம்: ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது ஐகோர்ட் கிளை கோபம்
UPDATED : அக் 03, 2024 10:31 PM
ADDED : அக் 03, 2024 06:26 PM

மதுரை: '' வேலையை செய்ய இயலவில்லை என்றால், அதிகாரிகள் வேலையை விட்டு விடலாம்,'' என ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது.
கரூர் வெண்ணைமலை முருகன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றாத விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு, அறநிலையத்துறையில் சம்பளம் பெற்றுக் கொண்டு ஏன் அறநிலையத்துறை சொத்துகளை பாதுகாக்கவில்லை? ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட பிறகும் ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? எனக் கேள்வி எழுப்பியதுடன், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக கோயில் அதிகரிகள் செயல்பட்டால் அவர்களிடமே சம்பளம் பெறலாம். வேலையை செய்ய இயலவில்லை என்றால், அதிகாரிகள் வேலையை விட்டு விடலாம் எனக்கூறினர்.
மேலும், 2021 முதல் தற்போது வரை கோயிலில் பணியாற்றிய நிர்வாக அதிகாரிகள், இணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

