ADDED : பிப் 13, 2026 01:25 AM
த மிழகத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகத்தை, 'இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீஸ்' என்ற நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதில் பணியாற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதைக்கண்டித்து, தி.மு.க.,வைச் சேர்ந்த, அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், கோவையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
தொடர்ந்து, சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் இருந்து முதல்வர் இல்லம் நோக்கி, இன்று பேரணியில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அவர்களுடன் அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தியதில், சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் செயலர் இருளாண்டி கூறியதாவது:
அரசுடன் மூன்று நாட்கள் பேச்சு நடந்தது. அதில், மார்ச் முதல் ஊதிய உயர்வுடன் கூடிய சம்பளம் வழங்கப்படும் என, உறுதியளித்துள்ளனர். அத்துடன், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலே சம்பளம் வழங்கப்படும்.
இதனால், முதல்வர் இல்லம் நோக்கிய பேரணி ஒத்திவைக்கப்படுகிறது. உறுதி அளித்தப்படி ஊதிய உயர்வு வழங்காதபட்சத்தில், மார்ச் மாதம் போராட்டம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

