மழையை எதிர்கொள்ள ஊராட்சிகளிடம் அரசு கேட்கிறது உள்ளூர் குழுக்கள்: இடர்பாடுகளை சரிசெய்ய தயாராகுமாறு மக்களிடம் கோரிக்கை
மழையை எதிர்கொள்ள ஊராட்சிகளிடம் அரசு கேட்கிறது உள்ளூர் குழுக்கள்: இடர்பாடுகளை சரிசெய்ய தயாராகுமாறு மக்களிடம் கோரிக்கை
ADDED : அக் 12, 2025 03:19 AM

சென்னை: “வடகிழக்கு பருவமழை காலத்தில், குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க, அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஊராட்சிகள் மேற்கொள்ள வேண்டும் . ஒவ்வொரு ஊராட்சியிலும், சமூக அமைப்புகள், பொதுமக்கள் பங்களிப்புடன் உள்ளூர் குழுக்கள் அமைத்து, அவசரகால நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும். இத ன் வாயிலாக, பேரிடர் இடர்பாடுகளை குறைக்கலாம்,” என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழகம் முழுதும், 12,525 கிராம ஊராட்சிகளில், கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. அதில், 'பாரத்நெட் - டான் பி நெட்' இணைய சேவையில், 'வீடியோ கன்பரன்ஸ்' வழியாக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:
கிராமங்களை முன்னேற்ற வேண்டும்; கிராம பொருளாதாரத்தை வலிமையாக்க வேண்டும்; கிராம நிர்வாகங்கள் வலிமையாக இருக்க, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
எதிர்க்கட்சி தலைவராக நான் இருந்த போது, தொடர்ந்து, கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றேன். முதல்வரான பின், மூன்றாவது முறையாக, கிராமசபை கூட்டங்களில் பங்கேற்கிறேன். வேறு எந்த முதல்வரும், இதுபோன்று கிராமசபை கூட்டங்களில் பங்கேற்றது கிடையாது.
தமிழக வரலாற்றில், 10,000க்கும் அதிகமான கிராமங்களில், இணையவசதி வாயிலாக, கிராமசபை கூட்டம் நடத்துவது, இதுதான் முதல் முறை.
கிராம மக்கள், ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்கவும், வளர்ச்சி பாதையில் செல்லவும், உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பதற்காக, ஆண்டுதோறும் ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கிராமங்களின் வளர்ச்சி குறித்து நேரடியாக விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றும் ஒரு விழாவாக, கிராமசபை கொண்டாடப்பட வேண்டும்.
தமிழக அரசு திட்டங்களை வகுத்தாலும், குடிமக்களுக்கு சில பொறுப்புகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் படிப்பதை, அனைவரும் உறுதிசெய்ய வேண்டும்.
குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால், உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து, அவர்களை மீட்க வேண்டும்.
நுாறு நாள் வேலை திட்டம் முறையாக செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முயற்சி எடுக்க வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தினர், குப்பை பிரித்தெடுத்தல், கழிவுநீர் மேலாண்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கிராமங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதில், யாருக்கும் அலட்சியம் இருக்கக்கூடாது. காலநிலை மாற்றத்தால், சரியான காலங்களில் மழை பெய்வதில்லை. இதுகுறித்து, கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மக்களுக்கு தற்போது முக்கிய பிரச்னையாக இருப்பது, தண்ணீர் பற்றாக்குறை. பணத்தை தண்ணீராக செலவு செய்கின்றனர் என்று, சிலர் சொல்வர். உண்மையில், தண்ணீரை தான் பார்த்து பார்த்து செலவு செய்ய வேண்டும். அதற்கு மழைநீர் சேகரிப்பு மிகவும் அவசியம்.
மழைக்காலம், விரைவில் துவங்க உள்ளது. டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களை தடுக்கும் சுகாதார நடவடிக்கைகளை, உடனடியாக முன்னேடுக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாகவே, அனைத்து ஊராட்சிகளிலும், அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
குடிநீர், மின்சாரம் போன்ற அவசிய தேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க அவசர திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும், சமூக அமைப்புகள், பொதுமக்களின் பங்களிப்புடன் சிறப்பு குழுக்கள் அமைத்து, அவசரகால நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும். இதனால், பேரிடர் இடர்பாடுகளை குறைக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஊராட்சி தலைவர்கள்
முன்வைத்த கோரிக்கைகள்
கிராமசபை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர்களிடம், தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, ஊராட்சி மன்ற தலைவர்கள், பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்தனர். அதன் விபரம்:
செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர்:
கோவளம் முதல் கேளம்பாக்கம் வரை உள்ள சாலையில், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள குன்றுகாடு பகுதியில், 'பைப் லைன்' அமைக்க வேண்டும். கோவளம் கார்மேல் பகுதியில், 100 மீட்டருக்கு சிமென்ட் சாலை அமைக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம், கொண்டங்கி ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி:
எங்கள் கிராம பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உடைக்கப்பட்டுள்ளது. புதிதாக நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும். கொண்டங்கியில் இருந்து எலிசத்திரம் சாலையில், மின் விளக்கு அமைக்க வேண்டும். கொண்டங்கி முதல் தோகைப்பாடி வரையுள்ள சாலையில், வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
கோவை மாவட்டம், வாரப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த முருகன்:
எங்கள் ஊராட்சிக்கு பஸ் வசதி இல்லை. பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சுல்தான் பட்டியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
தென்காசி மாவட்டம், முள்ளிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன்:
அங்காடிக்கு செல்லும் பாதையில் சிமென்ட் சாலை அமைத்து தர வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம், திருமலை சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன்:
விவசாய நிலங்கள் அனைத்தும், ஊர்களுக்கு தென்பகுதியில் இருக்கின்றன. சாலையை கடந்துதான், நிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. சாலையில் தடுப்புகள் அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என, முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.