அரசு பஸ் அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதல் ராமநத்தம் அருகே கோர விபத்து சிறுவன் உட்பட 9 பேர் பலியான சோகம்
அரசு பஸ் அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதல் ராமநத்தம் அருகே கோர விபத்து சிறுவன் உட்பட 9 பேர் பலியான சோகம்
ADDED : டிச 25, 2025 06:27 AM

வேப்பூர்/தமிழரசன்/9003883477/கீ.1715// : வேப்பூர்: ராமநத்தம் அருகே டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், 2 கார்கள் மீது மோதிய விபத்தில் 9 பேர் இறந்தனர்.
மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று மதியம் 3:00 மணிக்கு 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பஸ் (டி.என்.01-ஏ.என்.3147) புறப்பட்டது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த எழுத்துார் அருகில் இரவு 7:45 மணிக்கு பஸ் வந்த போது, திடீரென முன்பக்க டயர் வெடித்தது.
இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவே உள்ள சென்டர் மீடியனை உடைத்து கொண்டு எதிரில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த சைலோ கார் (டி.என்.50-ஏ.ஏ.0086), இனோவா கார் மீது மோதியது.
இதில், இனோவா காரில் பயணித்த கரூரைச் சேர்ந்த கிரி டெக்ஸ்ஸ்டைல் உரிமையாளர் ராஜரத்தினம், 65; இவரது மனைவி ராஜேஸ்வரி, 55; டிரைவர் ஜெயக்குமார்,30; உள்ளிட்ட 3 பேரும், சைலோ காரில் பயணித்த 10 பேரில் 8 வயது சிறுவன், டிரைவர் லால்குடி துரைராஜ், 40; உள்ளிட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில், ராமநத்தம் மற்றும் வேப்பூர் போலீசாரும், திட்டக்குடி, வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 6 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மேலும், ஒரு பெண் உட்பட 2 பேர் இறந்தனர். மற்ற 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்தவர்கள் உடல், அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பஸ் பயணிகள் சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பின், மாற்று பஸ் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் திருமாந்துறை டோல்கேட் ஊழியர்கள் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 8:45 மணி வரை 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

