பூ வியாபாரி காதில் 'பூ' சுற்றிய அரசு பஸ் டிரைவருக்கு 'காப்பு'
பூ வியாபாரி காதில் 'பூ' சுற்றிய அரசு பஸ் டிரைவருக்கு 'காப்பு'
ADDED : நவ 18, 2024 11:54 PM

நாமக்கல்: நாமக்கல், வண்டிக்கார தெருவை சேர்ந்த குமரவேல் மனைவி நந்தினி, 42; நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். நாமக்கல், ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பாலமுருகன், 49; நந்தினியின் பூக்கடை வாடிக்கையாளர்.
இவர் இரு மாதங்களுக்கு முன் நந்தினியிடம், 'சேலத்தை சேர்ந்த பாபுஜி என்பவருக்கு, ஆஸ்திரேலியாவில் உலோகம் விற்ற பணம், 90,000 கோடி ரூபாய் வந்துள்ளது.
அதில், மத்திய அரசுக்கு வரி கட்டியது போக, மீதமுள்ள, 30,000 கோடி ரூபாய்க்கு வரவு - செலவு கணக்கு காட்ட வேண்டும்.
அதற்கு, டிரஸ்ட் வாயிலாக கிராமத்தில் உள்ள மக்கள் வங்கி கணக்கில், ஒரு நபர் ஒரு டோக்கனுக்கு, 20,000 ரூபாய் கட்டினால், அவர்கள் கணக்கில், 1 கோடி ரூபாய் வரவு வைக்கப்படும்.
'அதில், 50 லட்சம் ரூபாயை, பாபுஜிக்கு கொடுத்துவிட வேண்டும். 4 லட்சம் ரூபாய் வரி கட்ட வேண்டும். மீதி, 46 லட்சம் ரூபாயை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதுபோல் பலர் பணம் பெற்றுள்ளனர். ஒருவர் ஒன்று முதல் ஐந்து டோக்கன் வரை போட்டுக் கொள்ளலாம்' என, தெரிவித்துள்ளார்.
அதன்படி, நந்தினியிடம், 'ஐந்து டோக்கன் வரை போடுங்கள்; 2.50 கோடி ரூபாய் வரை உங்களுக்கு வரும்' என தொடர்ந்து, ஒரு மாதமாக வற்புறுத்தி வந்துள்ளார். அவரது பேச்சை நம்பிய நந்தினி, அக்., 2ல், 5,000 ரூபாய், 13ல், 20,000 ரூபாய், நவ., 4ல், 45,000 ரூபாய் என, 'ஜிபே' வாயிலாக அனுப்பியுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன், நாமக்கல் டவுன் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து, 30,000 ரூபாய் ரொக்கம் என, மொத்தம், 1 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, பாலமுருகன், இதுபோல் பலரிடம் ஆசைவார்த்தை கூறி, கோடி கணக்கில் பணம் வாங்கி கொண்டு மோசடி செய்தது தெரியவந்ததும், நந்தினி அதிர்ச்சியடைந்தார்.
நந்தினி புகாரின்படி, நாமக்கல் போலீசார், பாலமுருகனை கைது செய்தனர்.