அரசு பஸ்சில் தீ விபத்து: 52 பயணிகள் உயிர் தப்பினர்!
அரசு பஸ்சில் தீ விபத்து: 52 பயணிகள் உயிர் தப்பினர்!
ADDED : செப் 27, 2024 06:52 AM

திருப்பூர்: திருப்பூரில் இருந்து, 52 பயணிகளுடன் திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு பஸ் தாராபுரம் அருகே திடீரென தீப்பற்றிக் கொண்டது. புகை வந்த போதே உஷாரான டிரைவர், பயணிகளை கீழே இறக்கி விட்டதால் அனைவரும் காயம் இன்றி தப்பினர்.
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 52 பயணிகளுடன் திருச்செந்தூர் நோக்கி அரசு பஸ் கிளம்பி சென்றது. தாராபுரம், அலங்கியம் பைபாஸ் அருகே சென்ற போது, திடீரென பஸ்சில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைபார்த்த டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தி பயணிகளை வேகமாக கீழே இறக்கி விட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் பஸ் முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். தகவலறிந்து சென்ற தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பயணிகள் போராட்டம்
அரசு பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, அதில் பயணம் செய்த பயணிகள் மாற்று பஸ்சிற்கு நீண்ட நேரம் காத்திருந்தனர். உரிய மாற்று பஸ் ஏற்பாடு செய்து கொடுக்க காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் போக்குவரத்து அலுவலர்கள், போலீசார் உள்ளிட்டோரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில பயணிகள் ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் அவர்களை சமாதனப்படுத்தி வேறு பஸ்களில் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.