'டாஸ்மாக்' மதுக்கடைகளை எங்கு அமைக்க வேண்டும் என்பது அரசின் முடிவு: ஐகோர்ட் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
'டாஸ்மாக்' மதுக்கடைகளை எங்கு அமைக்க வேண்டும் என்பது அரசின் முடிவு: ஐகோர்ட் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : அக் 11, 2025 12:37 AM
சென்னை:'டாஸ்மாக் மதுக்கடைகளை எங்கு அமைக்க வேண்டும் என்பது அரசின் முடிவு' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை மந்தைவெளி பஸ் நிலையத்துக்கு எதிர்புறம் உள்ள டாஸ்மாக் மதுக்கடை, தடை செய்யப்பட்ட பகுதிகளான பள்ளி மற்றும் வழிபாட்டு தலத்துக்கு அருகே அமைந்துள்ளது என்பதால், அதை அங்கிருந்து அகற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரப்பன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''மனுதாரர் கூறும் தகவல் முற்றிலும் தவறானது. இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் கடை வரவில்லை,'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கடை அமைந்துள்ள இடத்தில் இருந்து, 230 மீட்டர் தொலைவில் தான் வழிபாட்டு தலங்கள் அமைந்து உள்ளன. மனுதாரர் குற்றம் சாட்டுவது போல, பிரதான, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் இடம் பெறவில்லை.
டாஸ்மாக் மதுக்கடைகளை எங்கு அமைப்பது என்பது, மாநில அரசின் முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
பொது மக்கள் நலன் பாதிக்கப்படுவதற்கான உரிய ஆவண ஆதாரங்கள் இல்லாமல், டாஸ்மாக் கடை அமைக்கப்படும் இடங்கள் குறித்த விவகாரத்தில் தலையிட மு டியாது.
இந்த வழக்கில், இதற்கு மேல் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்பதால், உரிய ஆதாரங்கள் இன்றி வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம்.
இத்தொகையை, ஒரு மாதத்துக்குள் புதுச்சேரி அரசு சட்ட பணிகள் ஆணை குழுவிடம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.