எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்; அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்; அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
ADDED : நவ 30, 2024 01:11 PM

சென்னை: 'காற்றும் மழையும் வேகமாக இருக்கும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்' என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை எழிலகத்தில், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புயல் இரவு 10 மணிக்கு மேல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 5 மாவட்ட கலெக்டர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். இரவில் புயல் கரையை கடக்கும் என்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
தாழ்வான பகுதிகள், கடற்கரையோரம் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்ல முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம், அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே புயல் கரையை கடக்க உள்ளது. சென்னையில் 4 செ.மீ. தான் மழை பெய்துள்ளது. இவ்வாறு அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.