'டாஸ்மாக்' பணியாளர்களுடன் அரசு நடத்திய பேச்சு தோல்வி
'டாஸ்மாக்' பணியாளர்களுடன் அரசு நடத்திய பேச்சு தோல்வி
ADDED : பிப் 21, 2026 06:32 AM

சென்னை: டாஸ்மாக் மதுக் கடை பணியாளர்ளுடன், அரசு நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. இதனால், திடீரென மதுக் கடைகளை மூடி, கடையடைப்பு போராட்டம் நடத்த, தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது. அவற்றில், 23 ஆண்டுகளாக, பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.
எனவே, பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழுவினர், இம்மாதம், 1ம் தேதி முதல், சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 18ம் தேதி முதல் மதுக் கடைகளை மூடி, கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, அன்றும், அதற்கு அடுத்த நாளும், மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் அதிகாரிகள், சென்னை தலைமைச் செயலகத்தில், தொழிற்சங்க குழுவினருடன் பேச்சு நடத்தினர். இந்த பேச்சு, தோல்வியில் முடிவடைந்துள்ளது.
உத்தரவாத கடிதம் இது குறித்து, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழுவினர் கூறியதாவது:
பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ஆகியவை முதன்மையான கோரிக்கை. அவை குறித்து பரிசீலிக்க, உள் துறை இணைச் செயலர் தலைமையில், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உட்பட ஐந்து அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என, அமைச்சர் முத்துசாமி, முதல் நாள் பேச்சின் போது தெரிவித்தார்.
அக்குழு, நான்கு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும் எனக் கூறி, மறுநாள் எழுத்துப்பூர்வ உத்தரவாத கடிதம் தருவதாக தெரிவித்தார்.
ஆனால், இரண்டாம் நாள் கடிதம் தராமல், முதல் நாள் கூறியதையே தெரிவித்தார். எனவே, பேச்சு தோல்வி அடைந்தது.
அவகாசம் முன்கூட்டியே அறிவித்து போராட்டம் நடத்தினால், பேச்சு நடத்த அழைப்பு விடுத்து, போராட்டம் நடக்காதபடி தடுக்கின்றனர்.
எனவே, கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவாதம் அளிக்க, இரு நாட்கள் அவகாசம் தரப்படும்.
நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த வாரம், திடீரென மதுக் கடைகளை மூடி, தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

