50,159 மருத்துவ மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் கவர்னர் ரவி: அரசு துறை செயலர் புறக்கணிப்பு
50,159 மருத்துவ மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் கவர்னர் ரவி: அரசு துறை செயலர் புறக்கணிப்பு
UPDATED : பிப் 28, 2026 08:18 AM
ADDED : பிப் 28, 2026 05:42 AM

சென்னை: தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 38வது பட்டமளிப்பு விழாவில், 50,159 பேருக்கு, கவர்னர் ரவி பட்டங்கள் வழங்கினார். அரசு துறை செயலர் செந்தில்குமார், அந்நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில், 38வது பட்டமளிப்பு விழா, கவர்னர் ரவி தலைமையில் நேற்று நடந்தது. மருத்துவத்தில், 12,016, பல் மருத்துவத்தில், 2,569, இந்திய முறை மருத்துவத்தில், 3,269, மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகளில், 32,305 பேர் என, 50,159 பேர் பட்டங்கள் பெற்றனர்.
குறிப்பாக, 144 பேர் தங்கப் பதக்கமும், 42 பேர் வெள்ளிப் பதக்கமும், 51 பேர் அறக்கட்டளை சான்றிதழும், 166 பேர் பல்கலை சார்பிலான பதக்கங்களும் பெற்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படித்த சுவேதா என்ற மாணவி, ஒன்பது பதக்கங்களை பெற்றார்.
அதேபோல், முதுநிலை பட்டம் பெற்ற சுருதி, நிரஞ்சனா, ஆஷா ஆகியோர் தலா, ஆறு பதக்கங்களை பெற்றனர்.
இந்நிலையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், பட்டமளிப்பு விழாவுக்கு வரவில்லை. அதனால், அத்துறை அரசு செயலர் செந்தில்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
நிகழ்ச்சியில், பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி பேசியதாவது:
பல்கலையில் புதிய ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்களின் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக செயலாற்றும் மாணவருக்கு, 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அவர்களின், 75 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு இருப்பதுடன், ஐந்துக்கு காப்புரிமை கோரப்பட்டுள்ளது.
மருத்துவ அறிவியலுடன், தொழில்நுட்ப கற்றலை ஊக்குவிக்கும் வகையில், அண்ணா பல்கலை, சென்னை ஐ.ஐ.டி., வேலுார் தொழில்நுட்ப கல்லுாரி ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு சார்ந்த மருத்துவ படிப்புகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

