தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
ADDED : மார் 07, 2025 11:35 AM

சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பாக சட்டசபையில் ஜனவரி மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. கனிமவளங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக டிசம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த இரண்டு மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி இருந்தது.
இந்நிலையில், இன்று (மார்ச் 07) ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம், கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி ஆகிய இரண்டு மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி, பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதவிக்காலம் முடிந்த 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.