ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம்
ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம்
ADDED : பிப் 28, 2026 06:11 AM

சென்னை: 'ரேஷன் பொருட்களை எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும், ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம் பொருத்த வேண்டும்' என, கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களை, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து, கூட்டுறவு துறை வாகனங்களில் ரேஷன் கடைகளுக்கு அனுப்புகிறது. இதற்காக, வாடகை, சொந்த வாகனங்கள் பயன் படுத்தப்படுகின்றன.
சென்னையில் சராசரியாக, 100; மற்ற மாவட்டங்களில், 40 - 50 வாகனங்களில் ரேஷன் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
தற்போது, ரேஷன் பொருட்களை எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும், ஜி.பி.எஸ்., எனப்படும் இருப்பிடம் காட்டும் கருவியை பொருத்துமாறு, அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் பொருட்களை இறக்கும்போது, எடை குறைவாக இருப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தற்போது, சங்கத்திற்கு சொந்தமான சில வாகனங்களில் தான் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு உள்ளது; வாடகை வாகனங்களில் இல்லை.
இனி, வாடகை வாகனங்களிலும் அந்த கருவி பொருத்துவதை, அதிகாரிகள் கட்டாயமாக்கி உள்ளனர். இதனால், அறிவுறுத்தப்பட்ட வழியில் வாகனங்கள் செல்கிறதா என்பதை கண்காணிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

