அடி, உதையில் தப்பிக்க அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள்!
அடி, உதையில் தப்பிக்க அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள்!
ADDED : ஜூலை 06, 2023 05:32 AM

சென்னை: மின் திருட்டை தடுக்கும் பணியில், அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். அவர்கள், சம்பந்தப்பட்ட வீடு அல்லது தொழிற்சாலைக்கு ஆய்வுக்கு செல்லும்போது, அதிகாரிகள் போல் நடந்து கொள்ளாததால், தவறு செய்தவர்கள் வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனர்; சில இடங்களில் கைகலப்புகளும் நிகழ்கின்றன.
இதை தடுக்க, ஆய்வு அதிகாரிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
அனைத்து அதிகாரிகளும், பொது மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில், ஐ.டி., கார்டு எனப்படும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.
ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் துறையின் பெயர், பிரிவை தெளிவாக குறிக்கும் பலகை வைக்க வேண்டும்; வாகனங்களில் முதலுதவி பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
அனைத்து அதிகாரிகளும் மின் திருட்டை கண்டறிவதற்கான விதிகளை அறிந்திருக்க வேண்டும்.
விதிகள், ஒழுங்குமுறை உத்தரவுகளின் அனைத்து நகல்களையும், அதிகாரிகள் வைத்திருக்க வேண்டும்.
மின் வாரியத்தின் கண்ணியத்தை பேண, ஒழுக்கமான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.
மக்களுடன் தொடர்பு கொள்ளும்போது நல்ல நடத்தையை பின்பற்றுவதுடன், கனிவாக பேச வேண்டும்.
அபராதம் விதிக்க அறிக்கை தயாரிக்கும்போது, எவ்வித குறைபாடும் இல்லாமல், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சமீபத்திய விதிகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும்.
ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் புகார் அளிக்க, உள்ளூர் காவல் நிலையம், வருவாய் அதிகாரிகளின் தொடர்பு எண்களை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

