'குட்கா' முறைகேடு வழக்கு 'பென்டிரைவ்'வில் ஆவணங்கள்
'குட்கா' முறைகேடு வழக்கு 'பென்டிரைவ்'வில் ஆவணங்கள்
ADDED : ஜன 26, 2025 01:07 AM
சென்னை: 'குட்கா' முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் 14 பேருக்கு குற்றப்பத்திரிகை, கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களின் நகல்கள், 'பென்டிரைவ்'வில் வழங்கப்பட்டன.
லஞ்சம் பெற்று, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்க அனுமதித்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என, 26 பேருக்கு எதிராக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த விசாரணையின் போது, 20,000 பக்கங்கள் உடைய இந்த குற்றப் பத்திரிகையின் நகலை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 'பென்டிரைவ்'வில் வழங்க இருப்பதாக சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், மத்திய கலால் துறை முன்னாள் அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த வழக்கு நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய்பாபா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் மத்திய கலால் அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்குமார் உள்ளிட்ட, 14 பேருக்கு, பெ் டிரைவில் குற்றப்பத்திரிகை, கூடுதல் குற்றப் பத்திரிகை மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டன.
இரு தரப்பு விசாரணைக்கு பின், மார்ச் 10க்கு வழக்கை தள்ளிவைத்த நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்கள் அன்று குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொள்ளும்படி உத்தரவிட்டார்.

