பட்டமளிப்பு விழாவில் கைத்தறி மேலங்கி: பல்கலைகளுக்கு யு.ஜி.சி. வேண்டுகோள்
பட்டமளிப்பு விழாவில் கைத்தறி மேலங்கி: பல்கலைகளுக்கு யு.ஜி.சி. வேண்டுகோள்
ADDED : ஜன 18, 2024 06:29 AM

சென்னை: கைத்தறி துணியாலான மேலங்கிகளை பட்டமளிப்பு விழாக்களில் பயன்படுத்த வேண்டும் என, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., வெளியிட்ட அறிவிப்பு:
கைத்தறி துணிகளாலான ஆடைகள் அணிவது, இந்தியாவின் தட்பவெப்பநிலைக்கு, மிகவும் உகந்ததாக இருக்கும்.
எனவே, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், பட்டமளிப்பு விழாக்களில், கைத்தறி துணியாலான மேலங்கிகளை அணிவதை பரிசீலிக்க வேண்டும் என, யு.ஜி.சி., வலியுறுத்துகிறது.
இதுகுறித்து, 2015 ஜூலையிலும், 2019 ஜூனிலும், பல்கலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனை பின்பற்றி பல பல்கலைகள், பட்டமளிப்பு விழாக்களில், கைத்தறி துணியாலான மேலங்கிகளை பயன்படுத்த துவங்கிஉள்ளன.
ஆனால், சில பல்கலைகள் பழைய மேலங்கி முறையில் இருந்து, இன்னும் மாறவில்லை.
அந்த பல்கலைகளும் கைத்தறி துணி மேலங்கியை பயன்படுத்த முன்வருமாறு, கேட்டு கொள்ளப்படுகிறது.
ஒரு இந்தியராக கைத்தறி துணிகளை அணிவது பெருமை என்பது மட்டுமின்றி, கைத்தறி தொழிலை ஊக்கப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்.
கிராமப்புற நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எனவே, இதுகுறித்து பல்கலைகளும், கல்லுாரிகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கைத்தறி துணி மேலங்கி பயன்படுத்தியது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை யு.ஜி.சி.,க்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.