திருச்சி ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.75 லட்சம் பறிமுதல்
திருச்சி ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.75 லட்சம் பறிமுதல்
ADDED : டிச 08, 2024 07:23 AM

திருச்சி, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை வழியாக, நேற்று அதிகாலை 2:45 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்தது. அதில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர்.
ரயிலில் இருந்து இறங்கி சென்ற சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த ஆரோக்கியதாஸ், 49, என்பவர் வைத்திருந்த பையை, போலீசார் சோதனை செய்தனர்.
அதில், 500 மற்றும் 200 ரூபாய் நோட்டு கட்டுகளாக, 75 லட்சம் ரூபாய் இருந்தது. அதை எடுத்து வந்தவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த ரூபாயை பறிமுதல் செய்து, வருமான வரித்துறை துணை இயக்குனர் ஸ்வேதா முன்னிலையில், வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஹவாலா பணத்துடன் வந்த ஆரோக்கியதாசை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்ததில், சென்னை எழும்பூரில் இருந்து, அடையாளம் தெரியாத நபரால் அந்தப் பணம் கொடுக்கப்பட்டதாகவும், அதை, காரைக்குடியில், அடையாளம் தெரியாத நபரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறினார்.