தென் மாவட்டங்களில் கொட்டியது கனமழை; திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தென் மாவட்டங்களில் கொட்டியது கனமழை; திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை!
UPDATED : நவ 20, 2024 09:57 AM
ADDED : நவ 20, 2024 07:18 AM

சென்னை: கனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், தென்காசியில் இன்று (நவ.,20) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை காரணமாக, எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விபரம்;
* திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
* தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததாலும், தொடர்ந்து மழை பெய்வதாலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
* காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* ராமநாதபுரத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.
* விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து தலைமையாசிரியர் முடிவு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
அதிக மழைப்பொழிவு!
தமிழகத்தில் இன்று (நவ.,20) காலை 8:00 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு, மில்லி மீட்டரில்;
கோடியக்கரை- 149
திருப்பூண்டி- 134.5
திருக்குவளை -109.3
வேதாரண்யம்- 98.2
ராமநாதபுரம்- 96
தலைஞாயிறு- 85.4
வேளாங்கண்ணி- 80.8
பரமக்குடி- 77
வாலிநோக்கம்- 73.2
தீர்த்தாண்டதானம்- 63.3
கடலாடி- 55
மயிலாடி- 53.2
வட்டானம்- 46.8
திருச்செந்தூர்- 45
காயல்பட்டினம்- 45
தங்கச்சிமடம்- 41
மண்டபம்- 40.2
முதுகுளத்தூர்- 40
குலசேகரப்பட்டினம்- 39
கனமழை வார்னிங்!
நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரியில் காலை 10 மணி வரை கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நவ.,25ம் தேதி கனமழை தொடரும். இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.