ADDED : நவ 05, 2024 05:48 AM

சென்னை: 'தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வரும் 8ம் தேதி முதல் கனமழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை
:
தமிழகத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணி வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பில்லுார் அணை பகுதியில், 12 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அடுத்தபடியாக, நீலகிரி மாவட்டம் குன்னுாரில், 11 செ.மீ., மற்றும் பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில், 10 செ.மீ., அளவுக்கும் மழை பதிவாகி உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தென்மாவட்டங்களை ஒட்டி, வங்கக்கடலில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில், நாளை மறுதினம் வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்பின், 8ம் தேதி முதல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யலாம்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், 8, 9ம் தேதிகளில் கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.