நள்ளிரவில் கொட்டியது கனமழை; மேற்கு மாவட்டங்களில் அதிகம்!
நள்ளிரவில் கொட்டியது கனமழை; மேற்கு மாவட்டங்களில் அதிகம்!
UPDATED : செப் 29, 2024 07:43 AM
ADDED : செப் 29, 2024 06:57 AM

சென்னை: தமிழகத்தில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் உருவானதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பகல் பொழுதில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு நிவாரணம் தரும் வகையில் சில நாட்களாக மழை பெய்கிறது.
நேற்றிரவு தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் பழநி மற்றும் மணப்பாறையில் கனமழை வெளுத்து வாங்கியது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் நேற்று நள்ளிரவு நல்ல மழை பெய்தது. திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தமிழகத்தில் பதிவான மழை மில்லி மீட்டரில்
புழல்- 43.5 ,
அம்பத்தூர்- 16.5,
ஈரோடு குண்டேரிபள்ளம்- 91.2,
வரட்டு பள்ளம்- 63,
பவானிசாகர்- 19.4 ,
சத்தியமங்கலம்- 11,
காஞ்சிபுரம்- 16.2 ,
ஏற்காடு- 44,
சிங்கம்புணரி- 49,
வத்திராயிருப்பு- 37,
சிவகங்கை- 19,
ஸ்ரீவில்லிபுத்தூர்- 18 ,
விருதுநகர்- 13.6,
செங்கல்பட்டு - 24,
தாம்பரம் - 20,
விராலிமலை- 84,
கோடநாடு - 80,
அன்னவாசல்- 67 ,
தாராபுரம்- 64 ,
அலக்கரை எஸ்டேட்- 57,
அடார் எஸ்டேட்- 42,
பல்லடம்- 41,
திருப்பூர்- 38 ,
கீழ் கோத்தகிரி- 37,
அவிநாசி- 30,
தூத்துக்குடி- 27,
தென்காசி- 19
குமரி, திருநெல்வேலியில் கனமழை வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழக உள்பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் இன்று முதல் அக்.4ம் தேதி வரை, ஒரு சில இடங்களிலும்; புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மதுரை, துாத்துக்குடி தவிர்த்து, மற்ற ஒன்பது மாவட்டங்களில், கனமழை பெய்யலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.