ADDED : அக் 05, 2025 12:43 AM
சென்னை:மதுரை, ராமநாதபுரம் உட்பட, 12 மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், 12 செ.மீ., மழை பதிவானது. திண்டுக்கல்லில், 11 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் அவலுார்பேட்டை, செம்மேடு பகுதிகளில், தலா 10 செ.மீ., மழை பெய்துள்ளது.
தற்போது, தென்மாநில பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தமிழக பகுதிகளின் மேலும், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை முதல் வரும், 10ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்ப நிலையை பொறுத்தவரை, நாளை வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில், 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் குறைவாகவும், சில இடங்களில், 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாகவும் பதிவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.