ADDED : டிச 03, 2024 12:28 AM
சென்னை, டிச. 3- கரையை கடந்த, 'பெஞ்சல்' புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், நீலகிரி, கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தின் வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், 50 செ.மீ., மழை பெய்துஉள்ளது.
வளவனுாரில் 30 செ.மீ.,
இதற்கு அடுத்தபடியாக, விழுப்புரம் மாவட்டம் கெடார், 42, சூரப்பட்டு, 38, விழுப்புரம், 35; தர்மபுரி மாவட்டம் அரூர், 33; விழுப்புரம் முண்டியம்பாக்கம், கோலியனுார், கள்ளக்குச்சி மாவட்டம் திருப்பாலபந்தல், 32, மடம்பூண்டி 31; விழுப்புரம் மாவட்டம் முகையூர், வளவனுாரில் 30 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
வங்கக்கடலில் உருவான, 'பெஞ்சல்' புயல், நவம்பர் 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதன்பின், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
நேற்று காலை நிலவரப்படி, இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்து, வடமாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் நிலவியது.
இந்த அமைப்பு இன்று தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8ம் தேதி வரை இந்த மழை நிலவரம் நீடிக்கலாம்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.