தமிழகத்தில் ஜனவரி 9,10ல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஜனவரி 9,10ல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
ADDED : ஜன 05, 2026 02:30 PM

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 9, 10ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு கேரள கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்மாவட்டங்களில் பரவலாக வறண்ட வானிலை காணப்படும். தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஜனவரி 9ம் தேதி மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜனவரி 10ம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

