ADDED : செப் 11, 2025 11:59 PM
சென்னை:'தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, மதுரையில், 13 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மதுரை தல்லாகுளம், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் தலா, 12; திருச்சி மாவட்டம் துறையூர், கரூர் மாவட்டம் கடவூரில் தலா, 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப்., 17 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், சில இடங்களில் இன்று முதல் 15ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.