ADDED : செப் 27, 2024 05:59 AM

சென்னை: மேற்கு திசை காற்று மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால், கோவை, நீலகிரி உள்ளிட்ட, 19 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், நாளை இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்ட அறிக்கை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை கன மழை பெய்யலாம். நாளை மறுநாளும் கோவை உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் கன மழை தொடர வாய்ப்புள்ளது.
இருப்பினும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.