கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவுங்கள்... சிருங்கேரி சங்கராச்சாரியார் அருளுரை!
கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவுங்கள்... சிருங்கேரி சங்கராச்சாரியார் அருளுரை!
UPDATED : அக் 31, 2024 11:47 AM
ADDED : அக் 31, 2024 07:59 AM

-நமது நிருபர்-''பகவானை நம்புங்கள். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்ற இரு விஷயங்களை சனாதன ஹிந்து தர்மம் போதிக்கிறது. அதை அனைவரும் பின்பற்றுங்கள்,'' என்று சிருங்கேரி சங்கராச்சாரியார் அருளுரை வழங்கியுள்ளார்
உலகம் முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு அனந்தஸ்ரீ விபூசித ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதான சுவாமிகள் அருளுரை வழங்கியுள்ளார்.
அவர் கூறியதாவது: இன்று நமக்கு எல்லோருக்கும் பரம புனிதமான தீபாவளி பண்டிகை நாள். இந்தவொரு பவித்ர நாளை நன்றாக கொண்டாடுவது என்பது பரம்பரையாக வந்திருக்கும சம்பிரதாயம். சனாதன இந்து தர்மம் சிறந்த ஒரு தர்மம்.
ஹிந்து தர்மத்திற்கு மூலமான வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் உள்ளிட்ட எல்லா கிரந்தங்களிலும் இரு முக்கிய விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாரும் பகவான் அனுக்கிரகத்துக்காக அவரை நம்பியிருக்க வேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இந்த 2 விஷயங்களும் உலகத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான விஷயம். இந்த உலகத்தை ஸ்ருஷ்டித்து எல்லோருக்கும், அனுக்கிரகம் பண்ணுபவன், யார் சரியான வழியில் போகிறார்களோ, அவர்களுக்கு நல்லது செய்பவன். யார் தவறான வழியில் போறாங்களோ, அதுக்கு தகுந்த தண்டனை கொடுக்க ஒருவன் இருக்கிறான்.
அதனால், நாம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல வழியில் இருக்கணும் எனும் நம்பிக்கையோடு, பகவான் எனும் சக்தியை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள், எல்லா இடத்திலும் இருக்கின்றனர்.
பகவானுக்கு எந்த பெயரை சொல்றோம் என்பது, அது அங்கங்கு வேறு விதமாக உள்ளது. ஆனாலும் ஒரு சக்தி பகவான் எனும் ஒருவன் இருக்கிறான் என்ற விஸ்வாசம் உலகத்தின் அனைத்து இடத்திலும் இருக்கிறது. நம்மை காப்பாற்றும் பகவானின் அனுக்கிரகம் நமக்கு வேண்டும். பகவான் விஷயத்தில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பகவானின் அனுக்கிரகத்தை அடைய அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்பதை தான் ஹிந்து தர்மம் உபதேசம் பண்ணிக் கொண்டு இருக்கிறது.
இந்த உலகத்தில் நிறைய பேர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். யாருக்கு என்ன வேண்டி இருக்கோ, அதை நாம் கொடுக்க வேண்டும். பணத்தேவை இருப்பவர்களுக்கு பணமோ, பசியில் இருப்பவனுக்கு உணவும், ஞானம் தேவைப்படுவோருக்கு கல்வியையும் கொடுக்க வேண்டும். இதுதான் உதவி என சாஸ்திரத்தில் இருக்கிறது. இதுதான் நம் சனாதன தர்மம் நமக்கு சொல்லக்கூடிய விஷயம்.
இவ்வாறு சிருங்கேரி சங்கராச்சாரியார் அருளுரை வழங்கியுள்ளார்.