பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற உண்ணாவிரத அனுமதி கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற உண்ணாவிரத அனுமதி கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
ADDED : ஜன 03, 2025 06:58 AM

மதுரை; பிராமண சமூகத்தினரை பாதுகாக்க சட்டம் இயற்ற மதுரையில் ஜன.5 ல் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரிய வழக்கில், மனுதாரர் தரப்பில் உத்தரவாதம் தாக்கல் செய்ய அறிவுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த மனு: தமிழக ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த சிலரின் செயல்கள், பேச்சுக்கள் பிராமண சமூகத்திற்கு எதிராக உள்ளன. பல நாத்திகக் குழுக்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களை உடல் ரீதியாக தாக்கும் நிலைக்கு சென்றுள்ளனர். பிராமண சமூகம் தமிழ் கலாசாரத்திற்கு எதிரானது என்பது போல் திட்டமிட்டு சில ஊடகங்கள், சினிமாவில் தவறாக சித்தரிக்க முயற்சிக்கப்படுகிறது.
பிராமண சமூகத்தின் பல தலைவர்கள் தமிழ் கலாசார பாதுகாப்பு, வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளனர். அத்தகைய சமூகத்திற்கு அரசின் திட்டங்களை, சட்டப்பூர்வமான சலுகைகளை சரியாக வழங்குவதில்லை.
பிராமணர்கள் கடைபிடிக்கும் சனாதன தர்மத்தை மலேரியா, டெங்குபோல் ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசின் அதிகார பலமிக்க அமைச்சர் ஒருவர் பேசினார். இது பிராமண சமூகத்தை பற்றி பலரும் தவறாக பேச ஊக்குவித்துள்ளது. முக்கிய பதவி வகிக்கும் நபர்களின் இத்தகைய விமர்சனங்கள், விரும்பத்தகாத கருத்துக்கள் மற்றும் அவதுாறு பிரசாரங்களை அரசு தடுக்கவில்லை; மவுனமாக உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டிற்குரிய சலுகையை தமிழகத்தில் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்படுவது பிராமண சமூகம்தான்.
பிராமண சமூகத்தினரை பாதுகாக்க சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஜன.5ல் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உண்ணாவிரதம் நடத்த அனுமதி, பாதுகாப்பு வழங்கக் கோரி போலீஸ் கமிஷனர், சுப்பிரமணியபுரம் போலீசாரிடம் மனு அளித்தோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எம்.நிர்மல் குமார் விசாரித்தார்.
அரசு தரப்பு: கோவையில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் சர்ச்சையானது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்துாரி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவ்வாறு ஆட்சேபம் தெரிவித்தது.
நீதிபதி: மதுரை உண்ணாவிரதத்தில் யார், யார் பேசுகின்றனர், எத்தனைபேர் பங்கேற்கின்றனர் விபரத்தையும், சட்டத்திற்குட்பட்டு சுமூகமாக நடத்தப்படும் என்பதற்கான உத்தரவாதத்தையும் மனுதாரர் தரப்பில் இன்று (ஜன.3) தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிவுறுத்தினார்.