73,699 வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட 'பிடி வாரன்ட்' அமல்படுத்தாமல் இருப்பதாக ஐகோர்ட்டில் தகவல்
73,699 வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட 'பிடி வாரன்ட்' அமல்படுத்தாமல் இருப்பதாக ஐகோர்ட்டில் தகவல்
UPDATED : ஆக 03, 2025 02:44 AM
ADDED : ஆக 02, 2025 10:58 PM

சென்னை:'குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக, நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் காவல்துறை செயல்படுத்த வேண்டும்' என, உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மாநிலம் முழுதும், 73,699 வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்ட்கள் நிலுவையில் உள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
குற்ற வழக்குகளில் நீதி மன்றம் பிறப்பித்த, 'பிடி வாரன்ட்'களை அமல்படுத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள், நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணையில் உள்ளன.
பிடிவாரன்ட் இந்த வழக்குகளில், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'மாநிலம் முழுதும், 73,699 வழக்குகள், பிடிவாரன்ட் நிலையில் நிலுவையில் உள்ளன.
'இ தில், 1985ம் ஆண்டு வழக்குகளும் உள்ளன. 1985 முதல் 2024 வரை, 61,301 வழக்குகளில் பிடிவாரன்ட் உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:
மாநிலத்தில் 61,301 வழக்குகளில், பல ஆண்டு களாக, 'பிடிவாரன்ட்' அமல்படுத்தாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இது, நீதி பரிபாலன முறையை பலவீனப்படுத்தி விடும். எதிர்காலத்தில் பிடிவாரன்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் அமல் படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிடி வாரன்ட்களை அமல்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், உயர் நீதிமன்ற சுற்றறிக்கைகளை, காவல் துறை, நீதித்துறை பின்பற்றாவிட்டால், அது நீதித்துறையின் மாண்பையும், மரியாதையையும் மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையையும் குலைத்து விடும்.
பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால், அவர்களை தலைமறைவு குற்றவாளி என அறிவித்து, வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். அவர்களை நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர்கொள்ள செய்யும் வகையில், சொத்துக்களை முடக்குவது உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை, காவல் துறை எடுக்க வேண்டும்.
தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக, நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது குற்றம் சாட்டப்பட்டவர்களை, சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதை ஊக்குவிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நடவடிக்கை பி டிவாரன்ட்களை செயல்படுத்துவது தொடர்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், உயர் நீதிமன்ற சுற்றறிக்கைகள் அமல்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட நீதிமன்றங்களில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற மகேஷ்பாபு, ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
மாநிலம் முழுதும் உள்ள நீதிமன்றங்களில் ஆய்வு செய்து, ஒருங்கிணைப்பு அதிகாரி அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதேபோல, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளை கோப்புக்கு எடுக்கக் கோரிய வழக்கில், காவல் துறையினர் தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகைகளை தாமதமின்றி ஆய்வு செய்து, கோப்புக்கு எடுக்க வேண்டும்.
டி.ஜி.பி., அளித்த அறிக்கையில், 16,038 வழக்குகளில் மட்டும் பிடிவாரன்ட் அமல்படுத்தப்படவில்லை என்றும், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அளித்த அறிக்கையில், 73,699 வழக்குகளில் பிடிவாரன்ட் அமல் படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புள்ளிவிவரங்களில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.
எதிர்காலத்தில் ஏதேனும் சிக்கல்களை தவிர்க்க, தரவுகளை சரிசெய்து, துல்லியமான மற்றும் நிலையான அறிக்கையை உறுதி செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நீதி பரிபாலனத்தில், காவல் துறைக்கும், நீதிமன்றங்களுக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது. தீர்வு தேடி நீதிமன்ற கதவுகளை தட்டும் மக்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நடைமுறை குளறுபடிகளால் அவர்களுக்கு நீதி மறுக்கப்படவோ, தாமதப்படவோ கூடாது.
இவ்வாறு உ த்தரவில் கூறப்பட்டுள்ளது.