கொடிக் கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் இ டைக்கால தடை
கொடிக் கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்றம் இ டைக்கால தடை
ADDED : ஜூலை 23, 2025 03:27 AM

மதுரை : 'கொடிக் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை பொறுத்தவரை, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்போதைய நிலை தொடர வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை அ.தி.மு.க., நிர்வாகி கதிரவன், 'பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ஜெயம் தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கு அ.தி.மு.க., கொடிக்கம்பம் நட அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்,' என மனு தாக்கல் செய்தார். இதுபோல், மேலும் சில மனுக்கள் தாக்கலாகின.
ஜன. 27ல், இம்மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ''அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற வேண்டும்,'' என உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் மனு தாக்கல் செய்தார்.
'மதுரை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களை அகற்றும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்,' என, மற்றொரு மனுவும் சண்முகம் தரப்பில் தாக்கலாகியது.
''இம்மனுவை விசாரித்த நீதிபதி சரவணன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சண்முகம் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் ஆகியோர், 'சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து, அவர்களுடைய கருத்துகளை கேட்காமல், தனி நீதிபதி பொதுவாக உத்தரவு பிறப்பிப்பது ஏற்கத்தக்கதல்ல' எனக் கூறி, தனி நீதிபதி உத்தரவை தள்ளுபடி செய்ததோடு, இவ்வழக்கை கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்கவும் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.விஜயகுமார், எஸ்.சவுந்தர் அமர்வு நேற்று விசாரித்தது.
சண்முகம் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, ''அரசியல் கட்சிகள் அரசின் அனுமதியுடன் கொடிக்கம்பங்களை நிறுவியுள்ளன. தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்தக் கூடாது,'' என வாதிட்டார்.
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜராகி, ''நாடு முழுதும் கொடிக்கம்பங்கள் உள்ளன. தமிழகத்தில் காவல்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளிடம் தடையில்லாச் சான்று பெற்று கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.
''ஆனாலும், உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொடிக் கம்பங்கள் கட்சிகளின் கொள்கைகளை பிரதிபலிக்கின்றன. கட்சிகளின் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும்,'' என்றார்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:
கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை பொறுத்தவரை மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை தற்போதைய நிலை தொடர வேண்டும். விசாரணை ஆக., 6க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு கூறி உள்ளனர்.