வள்ளலார் கொள்கையை தனி நெறியாக அறிவிக்க வழக்கு' உயர்நீதிமன்றம் உத்தரவு
வள்ளலார் கொள்கையை தனி நெறியாக அறிவிக்க வழக்கு' உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 12, 2025 05:40 AM
மதுரை : வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கமுறை கொள்கையை புதிய மார்க்கம் அல்லது தனி நெறியாக அறிவிக்க ஆய்வு செய்ய குழு அமைக்க தாக்கலான வழக்கில், 'சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி நிவாரணம் தேடலாம்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை உத்தங்குடி கருணைசபை நிர்வாகி ராமலட்சுமி தாக்கல் செய்த பொதுநல மனு:
வள்ளலார் ஜாதி, சமயத்திற்கு அப்பால் சமரச சுத்த சன்மார்க்கம் பொது மார்க்கத்தை உருவாக்கினார். சமரச சுத்த சன்மார்க்கமுறை கொள்கையை புது மார்க்கம் அல்லது தனிநெறியாக அறிவிப்பது குறித்து அறநிலையத்துறை தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
அதன்படி வள்ளலார் வழிபாட்டை புதிய மார்க்கம் அல்லது தனிநெறியாக அறிவிக்க உத்தரவிட ஏற்கனவே உயர்நீதி மன்றத்தில் மனு செய்தோம்.
இதை பரிசீலிக்க 2019ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஆய்வு செய்ய உயர்மட்டக் குழுவை அமைப்பதாக அறநிலையத்துறை தெரிவித்தது. நடவடிக்கை இல்லை. உயர்மட்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் புருஷோத்தமன் ஆஜரானார்.
அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் சுப்பாராஜ்: குழு அமைப்பது தொடர்பாக அறநிலையத்துறையின் சம்பந்தப்பட்ட இணை கமிஷனர் பரிந்துரைத்தார். அதை கமிஷனர் நிராகரித்தார் என்றார்.
நீதிபதிகள், 'மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி நிவாரணம் தேடலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.