கவர்னர் ரவியை அவமதித்த மாணவியின் பட்டத்தை ரத்து செய்ய ஐகோர்ட்டில் வழக்கு
கவர்னர் ரவியை அவமதித்த மாணவியின் பட்டத்தை ரத்து செய்ய ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : நவ 29, 2025 12:39 AM

மதுரை: 'திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், வேந்தரான கவர்னரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மாணவியின் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும். துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஆக., 13ல் பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலை வேந்தரான தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார்.
நாகர்கோவிலை சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப், வேந்தரிடம் முனைவர் பட்டத்தை பெறாமல், துணைவேந்தர் சந்திரசேகரிடம் அளித்து பெற்றுக் கொண்டார்.
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவுறுத்தியும், வேந்தர், தன்னிடம் பட்டம் பெற வேண்டும் என சைகை காண்பித்த போதும், அதை ஜீன் ஜோசப் அலட்சியப்படுத்தினார். விழா நடக்கும் போதே அவர், 'தன் கணவர் தி.மு.க.,வில் பொறுப்பில் உள்ளார். தமிழுக்காக கவர்னர் எதுவும் செய்யவில்லை.
அதனால் அவர் கையால் பட்டம் பெற விரும்பவில்லை. பட்டம் வழங்க கவர்னரை விட இணைவேந்தரான உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அதிக தகுதிகள் உள்ளன' என, பேட்டியளித்தார்.
அரசியல் காரணங்களுக்காக, வேந்தரான கவர்னரை பொது வெளியில் அவமதித்துள்ளார். வேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொள்ளுமாறு துணைவேந்தர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். கல்வி சம்பந்தமான நிகழ்ச்சியை அரசியல் ஆதாயம், விளம்பரத்திற்காக பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது.
ஜீன் ஜோசப்பிற்கு பட்டம் வழங்கியதில், பல்கலை சட்டத்தின்படி செயல்படாத துணைவேந்தர் சந்திரசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜீன் ஜோசப்பிற்கு வழங்கிய பட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இம்மனு நிலைநிற்கத்தக்கது தானா என்பதை முடிவு செய்ய, நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. நீதிபதிகள் அடுத்தவாரம் வழக்கை ஒத்திவைத்தனர்.

