தரம் குறைந்த இருமல் மருந்து தயாரிப்பு ஹிமாச்சல் நிறுவனத்துக்கு அபராதம்
தரம் குறைந்த இருமல் மருந்து தயாரிப்பு ஹிமாச்சல் நிறுவனத்துக்கு அபராதம்
ADDED : செப் 15, 2025 02:49 AM
விருத்தாசலம்:தரம் குறைவாக இருமல் மருந்து தயாரித்த ஹிமாச்சல பிரதேச மாநில மருந்து நிறுவனத்துக்கு அபராதம் விதித்து, விருத்தாசலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
ஹிமாச்சலபிரதேசம், பவுண்டா சாகிப், நரிவாலா பகுதியில் இயங்கும் எல்.பி.ஐ.எல்., எனப்படும் எம்/எஸ் லெபாரட்டரி பார்மாசிடிகல்ஸ் இன்டியா பிரைவேட் லிமிடெட் மருந்து ஆய்வக நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து தரம் குறைவாக இருப்பதாக, கடந்த 2019ல் புகார் எழுந்தது.
அதன்படி, அப்போதைய கடலுார் மாவட்ட மருந்து ஆய்வாளர் பரிந்துரையின்படி, இருமல் மருந்தின் தரம் குறித்து ஆய்வக பரிசோதனை நடத்தப்பட்டதில், தரம் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மருந்து நிறுவனம் மற்றும் அதன் நிறுவன இயக்குனர் பாய்தேவ் ராஜ் பாட்டியா மகன் சஞ்சீவ் பாட்டியா, துணைத் தலைவர் வஷிஸ்தா மகன் சுனில் வஷிஸ்தா ஆகியோர் மீது விருத்தாசலம் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 1ல், கடந்த 2019, நவம்பர் 29ம் தேதி வழக்கு தொடரப்பட்டது.
நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த வழக்கில், மருந்து நிறுவனம் மற்றும் துணைத் தலைவர் சுனில் வஷிஸ்தாவுக்கு தலா 20 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் அரவிந்தன் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் இரண்டாவது குற்றவாளியான நிறுவன இயக்குனர் சஞ்சீவ் பாட்டியா, ஆப்ரிக்க நாட்டில் நடந்த விமான விபத்தில் இறந்ததால், அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.