பஸ்கள் மோதிக்கொண்டதில் வீடு சேதம்; இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி
பஸ்கள் மோதிக்கொண்டதில் வீடு சேதம்; இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி
ADDED : ஜன 03, 2025 06:59 AM

மதுரை; துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இரு பஸ்கள் மோதிக் கொண்டதில் வீடு சேதமடைந்ததற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி ஐயாசாமி தாக்கல் செய்த மனு: எனக்கு சொந்தமான வீடு இனாம் மணியாச்சி இந்திரா காலனியில் உள்ளது. விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழக பஸ் 2017ல் ஒரு தனியார் பஸ் மீது மோதியது. அப்போது எனது வீட்டின் மீது மோதி, வீடு சேதமடைந்தது. பயணிகளில் பலர் மற்றும் டிரைவர் காயமடைந்தனர்.
அரசு பஸ் டிரைவரின் கவனக்குறைவு மற்றும் வேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணம். போலீசார் வழக்கு பதிந்தனர். வீடு சேதமடைந்ததற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கோரி தமிழக போக்குவரத்துத்துறை செயலர், மதுரை மண்டல போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர், விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்கு மனு அனுப்பினேன். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: இரு பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில் மனுதாரரின் வீடு சேதமடைந்தது. சம்பவத்திற்கு அரசு பஸ் டிரைவரின் கவனக்குறைவு காரணமல்ல என போக்குவரத்துக் கழக நிர்வாகம் மறுத்துள்ளது.
சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து இங்கு தீர்வு காண முடியாது. ஆதாரத்துடன் அணுக வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்டத்திற்கு உட்பட்டு இழப்பீடு பெற உரிய நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உரிமை உண்டு.இவ்வாறு உத்தரவிட்டார்.