கண்காட்சிகளில் வீட்டு வசதி வாரிய அரங்கு: முடங்கியுள்ள வீடுகளை விற்க புதிய முயற்சி
கண்காட்சிகளில் வீட்டு வசதி வாரிய அரங்கு: முடங்கியுள்ள வீடுகளை விற்க புதிய முயற்சி
ADDED : செப் 23, 2024 01:58 AM
சென்னை: அரசு நிறுவனம் என்று ஒதுங்கியிருந்த வீட்டுவசதி வாரியம், தற்போது முடங்கியுள்ள வீடுகளை விற்பதற்காக, தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் நடத்தும் கண்காட்சிகளில் அரங்கு அமைத்து பங்கேற்று வருகிறது.
தமிழகத்தில், மக்களுக்கு நியாயமான விலையில், வீடு, மனைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வீட்டு வசதி வாரியம் துவக்கப்பட்டது.
நாளிதழ் அறிவிப்பு
மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் என்பதால், தனியார் நிறுவனங்களை போன்று, வீடுகளை விற்க பெரிய அளவில் விளம்பரம் மற்றும் பிரசாரம் இருக்காது.
அந்தந்த கோட்ட அலுவலக அறிவிப்பு பலகைகள், நாளிதழ் அறிவிப்புகள் வாயிலாக மட்டுமே, வீட்டு வசதி வாரியத்தின் புதிய திட்டங்கள் குறித்து மக்கள் அறிய முடியும்.
வாரியத்தில் வீடு வாங்க வேண்டும் என்றால், அந்தந்த கோட்ட அலுவலகங்களை அணுக வேண்டும்.
அவ்வாறு, கோட்ட அலுவலகங்களை அணுகும் மக்களுக்கு, அங்குள்ள அலுவலர்கள் உரிய பதில் அளிப்பதில்லை. குறிப்பாக, குறைந்தபட்ச மரியாதை கூட தருவதில்லை என்று கூறப்படுகிறது.
அலுவலர்கள், வாரிய திட்டங்களின் உரிமையாளர்கள் போன்று நடந்து கொள்வது, மக்களிடம் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதேநேரம், சுயநிதி திட்டங்கள் அதிகரித்ததால், வாரிய திட்டங்களில் விற்காத வீடுகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது.
துறை அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் வீடுகளை விற்க வேண்டும் என்று கூறி வந்தாலும், கள நிலையில் உள்ள அலுவலர்களின் அணுகுமுறை, அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இப்பிரச்னை அமைச்சர் வரை சென்றதால், தற்போது புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசின் பொதுத்துறை நிறுவனம் என்ற நிலையில் இருந்து, தனியார் நிறுவனங்களுக்கு இணையாக களமிறங்க வேண்டிய சூழல், வீட்டுவசதி வாரியத்திற்கு உருவாகிஉள்ளது.
தகவல் பெற்றனர்
அதனால், மக்கள் அதிகம் கூடும் கண்காட்சிகளில், அரங்குகள் அமைத்து, வீடுகளை விற்க முடிவு செய்துள்ளோம்.
சமீபத்தில் சென்னையில் நடந்த இரண்டு கண்காட்சிகளில் அரங்கு அமைத்தோம். அதில், வீடு வாங்குவது தொடர்பாக, அதிகம் பேர் தகவல்களை பெற்று சென்றனர்.
வாரியத்தின் அனைத்து திட்டங்கள் குறித்த விபரங்கள், ஒரே இடத்தில் கிடைப்பது மக்களுக்கு பேருதவியாக உள்ளது. இதனால், நிலுவை வீடுகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.