6 மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்; அடுத்த 3 மணி நேரத்துக்கு வானிலை கணிப்பு இதுதான்!
6 மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்; அடுத்த 3 மணி நேரத்துக்கு வானிலை கணிப்பு இதுதான்!
ADDED : அக் 16, 2024 07:39 AM

சென்னை: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை நிலவரம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது என வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக நல்ல மழை கொட்டி தீர்த்து வருகிறது.
மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், சைதாப்பேட்டை, கிண்டி என பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (அக்.,16) காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு மழை காரணமாக தண்ணீர் தேங்கும் வாய்ப்புகள் உள்ளன.
திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழைநீர் தேங்கும் போது, சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும். ஆங்காங்கே பாதுகாப்பற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.