ADDED : ஆக 09, 2025 02:16 AM
சேலம்:''வழக்குகளை அணுகும்போது மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும்,'' என, சேலம் சட்ட கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில், சிவகங்கை, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அறிவொளி பேசினார்.
சேலம் அரசு சட்ட கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம் நேற்று நடந்தது. தமிழக சட்ட கல்வி இயக்கக இயக்குனர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.
சிவகங்கை, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அறிவொளி பேசியதாவது:
சட்ட கல்லுாரி மாணவர்களான உங்களுக்கு, இன்று ஒரு சந்தேகம் என வந்தால், சில நொடிகளில் இணையதளத்தில் தீர்த்துக்கொள்ள முடியும். முன்பெல்லாம் எங்கு எது நடந்தாலும் தெரியாது. ஒரு சம்பவம் நடந்ததும், உடனே உலகம் முழுதும் பரவும்படி, தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இதை பயன்படுத்தி பல்வேறு விஷயங்களை கற்க முடியும். அதேநேரம், பல தவறான தகவல்களும் கொட்டி கிடக்கின்றன. அது சரியா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்.
எது படித்தாலும், அதில் உள்ள நுண்பிரிவுகள் வரை, தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். வழக்குகளை அணுகும்போது மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும். வாட்ஸாப், இ - மெயில் என, சமூக ஊடகங்களில் எதை பகிர வேண்டும், பகிரக்கூடாது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம். இதில் பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன.
நம்முடன் உள்ளவர்கள் தவறு செய்யும்போது, 'நோ' சொல்லி பழகுங்கள். மேலும் பிரச்னை வந்த பின், அதை எப்படி சமாளிப்பது என, முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, 'மனித உரிமை பரிணாமம்' குறித்து, ஆத்துார் கூடுதல் மாவட்ட நீதிபதி ரவிச்சந்திரன் பேசினார். கல்லுாரி முதல்வர் துர்காலட்சுமி, பேராசிரியர்கள், திரளான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

