காதல் மனைவி அடித்து கொலை காட்டுமன்னார்கோவிலில் கணவர் கைது
காதல் மனைவி அடித்து கொலை காட்டுமன்னார்கோவிலில் கணவர் கைது
ADDED : அக் 15, 2024 06:09 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், காதல் மனைவியை சந்தேகத்தின் பேரில் கட்டையால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழ்புளியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன் மகன் சிலம்பரசன், 24; எலக்ட்ரீஷியன். இவருக்கு, திருவாரூர் மாவட்டம் அகரத்தநல்லுாரைச் சேர்ந்த மனோகரன் மகள் அபிநயா ஜோதி, 20; என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டு, காதலித்தார். இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு, அகரத்தநல்லுாரில் தங்கினர். பிறகு, காட்டுமன்னார்கோவில் மேல வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், அபிநயஜோதி அடிக்கடி மொபைல் போனில் பேசியதால், மனைவி மீது சிலம்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டு, கண்டித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து மொபைல் போனில் அபிநயஜோதி பேசி வந்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த சிலம்பரசன் வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த சிலம்பரசனிடம், ஏன் வேலைக்கு செல்லாமல் சுற்றுகிறாய், சாப்பாட்டிற்கு என்ன செய்வது என அபிநயஜோதி கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிலம்பரசன் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த அபிநயஜோதி மயங்கி விழுந்துள்ளார்.
அச்சமடைந்த சிலம்பரசன், அபிநயஜோதியை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் இறந்தார்.
தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிலம்பரசனை கைது செய்தனர். சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார்.