எனக்கும் முதல்வர் கனவு உண்டு: பழநியில் தன் விருப்பத்தை வெளியிட்ட திருமா
எனக்கும் முதல்வர் கனவு உண்டு: பழநியில் தன் விருப்பத்தை வெளியிட்ட திருமா
ADDED : நவ 22, 2024 06:13 AM

ஆயக்குடி : ''எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு''என, திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன் பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பழனியாண்டவரை தரிசிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அதை பார்க்க வந்தேன். நேர்த்திக் கடன் செலுத்த வந்ததாக செய்திகளைக் கிளப்பி விடுவர். உண்மையில் அதற்காக வரவில்லை.
காலம் காலமாக ஆதிக்க சக்திகளுக்கு அடிமைகளாக இருக்கும் மக்களை, ஆட்சி அதிகார பீடத்தில் அமரும் வகையில், அவர்களை மாற்ற வேண்டும். அதற்கு அம்மக்களை தகுதிப்படுத்த வேண்டும்.
எனக்கும் முதல்வர் பதவி கனவு உண்டு. அதற்கேற்ப, இன்று முதல் புள்ளியை துவக்கியுள்ளோம். போகப்போக கனவை நனவாக்கும் இலக்கு நோக்கி வேகமாக பயணப்படுவோம்.
தமிழகத்தில் கட்சி துவங்காமலேயே பலர் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். நாம் அங்குலம் அங்குலமாக வளர்ந்து வருகிறோம். தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்கிறோம். மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் வி.சி.,க்கள் கொடி பறக்கிறது. மக்களுக்கு நம் மீது நம்பிக்கை உருவாகி உள்ளது. அதை தக்க வைக்க வேண்டும். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கட்சி நிர்வாகிகளுடன் ரோப் கார் வழியாக பழனி கோவிலுக்குச் சென்று முருகனை தரிசித்தார் திருமாவளவன். கோவிலுக்குள் அவரை தேவஸ்தான அதிகாரிகளும், ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் வரவேற்று பிரசாதங்களை வழங்கினர்.
தொடர்ச்சியாக, படிப்பாதை வழியாக பழனி மலையடிவாரம் வந்து, அங்கு புலிப்பாணி ஆசிரமத்துக்குச் சென்று, அங்கிருக்கும் தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவ சமாதியை வணங்கினார். பழனி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள், திருமாவளவனுக்கு ஸ்படிக மாலை அணிவித்து, போகர் படம் வழங்கினார்.
தரிசனம் முடிந்து புலிப்பாணி ஆசிரமத்துக்கு வெளியே வந்த திருமாவளவனிடம், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது; அரசிடம் சொல்லி, எங்களுக்கு உதவ வேண்டும் என, மலையடிவார நடைப்பாதை வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அதைக் கேட்டுக் கொண்ட திருமாவளவன், ''முதல்வரிடம் பேசி உதவுகிறேன்' என்று சொல்லி விட்டு கிளம்பினார்.