UPDATED : ஆக 09, 2025 04:17 PM
ADDED : ஆக 09, 2025 04:04 PM

மாமல்லபுரம்: '' பாமக நிறுவனர் ராமதாசுடன் 40 முறைக்கு மேல் பேசினேன். முதலில் சரி எனக்கூறும் அவர், பிறகு அவரை சுற்றி உள்ளவர்கள் கூறியதை கேட்டு இல்லை என்பார்,'' என பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
மெகா கூட்டணி
மாமல்லபுரத்தில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என தெளிவுபடுத்திவிட்டோம். இதனை வீதிவீதியாக சொல்லி கொண்டுள்ளேன். அடுத்து யார் ஆட்சி செய்ய வேண்டும். அது, முக்கியமானது. இதை இன்னும் ஒரு சிறு காலத்தில் முடிவு செய்வோம். நல்ல கூட்டணியை அமைப்போம். மெகா கூட்டணியை அமைப்போம். ஆட்சிக்குவருவோம். ஒரு சில காலத்தில் அது நடக்கும். உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்று எனக்கு நன்றாக தெரியும். உங்கள் விருப்பப்படியே தான் கூட்டணியை அமைப்போம்.
பதவி மீது ஆசை இல்லை
நமது வழிகாட்டி, குலதெய்வம் ராமதாஸ் தான். ராமதாஸ் உருவத்தில் இல்லை என்றாலும், உள்ளத்தில் இருக்கிறார். அவருக்கு இங்கு நிரந்தரமாக நாற்காலி இருக்கிறது. இது அவரின் நாற்காலி . அவர் நமது நிறுவனர். அதில் மாற்றுக்கருத்து இல்லை. பொறுப்புகளுக்கும், பதவிகளுக்கும் நான் ஆசைப்படுபவன் இல்லை. என்னை தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். காலத்தின் கட்டாயத்துக்காக உங்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக இங்கு நின்று கொண்டுள்ளேன். இந்த நாற்காலி அவரின் நிரந்தரமான நாற்காலி. அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவர் வருவார் என்று நம்பிக்கை உள்ளது.
பிடிவாதக்காரன் இல்லை
ராமதாஸ் தேசிய தலைவர். சாதனையாளர். சமூக சீர்திருத்தவாதி. நமக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்தவர்.நமக்கு எல்லாம் பாடம் கற்றுக் கொடுத்தது ராமதாஸ் தான். ஆனால் இன்றைக்கு ராமதாசால் நமது கட்சியை நிர்வகிக்க, முடியாத ஒரு சூழல் இருக்கிறது.
இதில் சில செய்திகள் வெளியில் சொல்ல முடியாத சூழல் உள்ளது. நான் ஒன்றும் பிடிவாதக்காரன் கிடையாது. நான் சொல்வது, ' நாம் எல்லாரும் சேர்ந்து செய்யலாம்'. இதுவே 5, 6 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு சூழல் இருந்தால் யோசிக்க போவது கிடையாது.எனக்கு பதவி, பொறுப்பு மீது என் மனதில் கிடையாது.இந்த பதவி வேண்டும் என்றால் 15 ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டு வாங்கியிருப்பேன். அது அவசியம் இல்லை. அதற்காக வரவில்லை. பதவி பொறுப்புக்காக நான் வரவில்லை.
என்னுடைய நோக்கமே இந்த சமுதாயத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். சமுதாயத்தை வழிநடத்த வேண்டும் என்பதே.இந்த சமுதாயத்துக்காக தான் கட்சி துவங்கினார். சமுகநீதிக்காக தான் . அது தான் அடித்தளம்.
நேற்று கூட நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வரும் போது தீர்ப்பு வந்தது. மகிழ்ச்சி. சந்தோஷம் கிடையாது. வருத்தம். என் மனதில் அவ்வளவு வலியுடன் தான் அந்தத் தீர்ப்பை எதிர்கொண்டேன். யாரை எதிர்த்து தீர்ப்பு. நமக்குள்ளேயே ஒரு தீர்ப்பா?. நமக்குள்ளேயே எதிர்த்து ஒரு தீர்ப்பா? அது ஒரு தீர்ப்பா?. என்னை பொறுத்த வரை அது வெற்றி கிடையாது.
பேச்சு
ஒருசில முன்னோடிகள் என்னிடம் ராமதாசிடம் பேச வேண்டும் என்றனர். எல்லோர் மனதில் உள்ளது. நியாயமான கேள்விகள். 40 முறைக்கு மேல் பேசி உள்ளேன். நேற்று கூட நான் பேசினேன். நண்பர்கள், உறவினர்கள்,நலம் விரும்பிகளை வைத்து பேசி கொண்டு உள்ளேன். ஆனால், ராமதாஸ் காலையில் சரி என்பார். பிறகு பூஜாரிகள் போய், அவரிடம் இல்லை என சொல்வார்கள். மறுநாள் காலை இல்லை என ராமதாஸ் சொல்வார். பிறகு 3 நாள் பேசி கெஞ்ச வேண்டும்.
சுயநலத்துக்காக
இந்த நேரத்தில் திமுகவை எதிர்த்து விரட்டி அடிக்க வேண்டும் என்ற வேகத்துடன் களத்தில் நாம் இருக்க வேண்டும். ஆனால் நமக்குள் பதிவுகளை போட்டு கொண்டு , நமக்குள் வழக்கு போட்டு கொண்டு, பேசிக் கொண்டு, விமர்சித்து கொண்டு, பேட்டி கொடுத்து கொண்டு இருக்கிறோம். இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்படி எல்லாம் நடக்கும் என நினைக்கவில்லை. ஒரு சிலரின் சுயநலத்துக்காக இதை வைத்து சம்பாதிக்க வேண்டும். அது வேண்டும். இது வேண்டும் என நினைத்தால் அதனை விட மாட்டேன். நான் பிடிவாதமாக இல்லை. உறுதியாக இருக்கிறேன். இதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. நாம் ஒன்றாக களத்தில் இருப்போம். நீங்கள் தான் கட்சியை வழி நடத்துவீர்கள். இவ்வாறு அன்புமணி பேசினார்.