பாலியல் வழக்குகளில் தேவையின்றி ஆண்மை பரிசோதனை நடத்தக்கூடாது நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
பாலியல் வழக்குகளில் தேவையின்றி ஆண்மை பரிசோதனை நடத்தக்கூடாது நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
ADDED : பிப் 08, 2025 12:46 AM
சென்னை:'பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட அனைத்து மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றங்களும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தேவையின்றி ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில், பள்ளி மாணவிக்கு மாணவன் மஞ்சள் கயிறு கட்டியது தொடர்பான வழக்கு; தர்மபுரி மாவட்டத்தில் நடந்த இளம்வயது திருமணம் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. விசாரணையின் முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட அனைத்து மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றங்களும், 'குற்றம் சாட்டப்பட்டவர், தான் குற்றமற்றவர்' என்ற காரணத்தை முன் வைக்காவிட்டால், அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடக்கூடாது.
பாலியல் குற்ற வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்த வலியுறுத்தக் கூடாது என்ற உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுமாறு, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், டி.ஜி.பி., சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அத்தகைய சோதனை நடத்தப்படவில்லை என்பதை, டாக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பெரும்பாலான வழக்குகளில், இளம் சிறார்கள் திருமணம் செய்து கொள்ளும்போது, வழக்கில் தொடர்புடைய மைனர் பையன் மீது, போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில், இளம்சிறார் நீதி வாரியமும், இயந்திரத்தனமாக செயல்படுவது, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
மைனர் சிறுவர்களை, கண்காணிப்பு இல்லங்களுக்கு அனுப்ப, இளம் சிறார் நீதி வாரியம் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. இது தொடர்பாக நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
'மைனர் சிறுவர்களை கைது செய்ய வேண்டாம்' என, காவல் துறையினருக்கு டி.ஜி.பி., அறிவுறுத்த வேண்டும். பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய கருவை பராமரிப்பது தொடர்பாக, தற்போது உள்ள வசதிகள் குறித்து, தடய அறிவியல் துறை அதிகாரிகள் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை மார்ச் 14க்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.