ராம்தேவ் வழக்கில் சிதம்பரம் சேர்க்கப்படுவாரா?இன்று முடிவு தெரியும்
ராம்தேவ் வழக்கில் சிதம்பரம் சேர்க்கப்படுவாரா?இன்று முடிவு தெரியும்
ADDED : ஜூலை 25, 2011 12:03 AM

புதுடில்லி : டில்லியில், யோகா குரு ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்த போது, அவரது ஆதரவாளர்களை நள்ளிரவில் போலீசார் விரட்டியடித்த வழக்கில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சேர்க்கப்படுவாரா என்பது இன்று தெரியும்.
'வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும்' எனக்கோரி, யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த மாதம் 4ம் தேதி டில்லி ராம்லீலா மைதானத்தில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். ஆனால், நள்ளிரவில் இந்தப் பகுதிக்குள் நுழைந்த போலீசார், அங்கிருந்த ராம்தேவ் ஆதரவாளர்களை விரட்டியடித்தனர். இந்தச் சம்பவங்களை, 'டிவி'யில் பார்த்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் சுதந்திரகுமார் ஆகியோர், அறவழியில் உண்ணாவிரதம் இருந்தவர்களை, போலீசார் அடித்து விரட்டியது குறித்து விளக்கம் அளிக்கும்படி டில்லி அரசுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், டில்லி போலீசாருக்கும் உத்தரவிட்டனர். இது குறித்து டில்லி போலீஸ் கமிஷனர் பி.கே.குப்தா தனது வாக்குமூலத்தில் குறிப்பிடுகையில், ' யோகா பயிற்சி நடத்தப்போவதாக அனுமதி வாங்கி விட்டு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதால் தான் ராம்தேவ் ஆதரவாளர்களைக் கலைந்து போகச் செய்தோம். அவர்கள் மீது தடியடி நடத்தவில்லை' என்றார். ராம்தேவ் தரப்பில் ஆஜராகி வாதாடிய பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ' உள்துறை அமைச்சர் சிதம்பரம் தனிப்பட்ட முறையில், ராம்தேவ் ஆதரவாளர்களை விரட்டியடிக்கும்படி போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த வழக்கில் அவரையும் சேர்க்க வேண்டும்' என, வாதாடினார். சுப்ரீம் கோர்ட்டில் இன்று இது தொடர்பாக நடக்கும் விசாரணையின் போது, உள்துறை அமைச்சர் சிதம்பரம் இந்த வழக்கில் சேர்க்கப்படுவாரா என்ற விவரம் தெரியவரும்.