அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் சலுகை அறிவித்தால் அரிசி கார்டுகள் குறைந்து பல கோடி ரூபாய் மிச்சமாகும்
அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் சலுகை அறிவித்தால் அரிசி கார்டுகள் குறைந்து பல கோடி ரூபாய் மிச்சமாகும்
ADDED : ஜூன் 08, 2026 06:28 AM

சென்னை: 'அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டுமின்றி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து வகை ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசும், இதர அரசு சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தால், ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவு மிச்சமாகும். அத்துடன், அரிசி கார்டு கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கையும் குறையும்.
தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதைப்பெற ரேஷன் கார்டு அவசியம்.
அரிசி கார்டு
முன்னுரிமை அரிசி, முன்னுரிமையற்ற அரிசி, அந்தியோதயா, சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காதது போன்ற பிரிவுகளின் கீழ், மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப, ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
பொங்கல் பரிசு, பேரிடர் நிவாரண தொகை என, அரசு வழங்கும் சலுகைகள் எல்லாம், அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதால், பலரும் அரிசி கார்டு கேட்டே விண்ணப்பம் செய்கின்றனர்.
தற்போது, மொத்தம் உள்ள, 2.28 கோடி ரேஷன் கார்டுகளில், 3.60 லட்சம் மட்டுமே சர்க்கரை கார்டுகள், 60,000 கார்டுகள் எந்த பொருளும் வாங்காதவை. மீதமுள்ள, 2.24 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்றவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
ஒரு கார்டுக்கு, ஆண்டுக்கு சராசரியாக, அரசு 1,000 ரூபாய் செலவு செய்கிறது. மாதந்தோறும் சராசரியாக, 2 கோடி கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்கும் நிலையில், 20 லட்சம் பேர் எந்த பொருட்களையும் வாங்குவதில்லை.
அவர்கள் பொங்கல் பரிசு வாங்கவே, ரேஷன் கார்டை பயன்படுத்துகின்றனர். தற்போது, பலரும் பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக, அரிசி கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
ரூ. 10,500 கோடி
இதுகுறித்து, உணவு வழங்கல் துறையின் உதவி ஆணையர்கள் கூறியதாவது: உணவு மானியத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும், 10,500 கோடி ரூபாயை அரசு செலவழிக்கிறது. அரிசி கார்டு கேட்டு மாதம் சராசரியாக, 40,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். இவர்களில், 50 சதவீதம் பேர் தகுதியற்றவர்கள்.
மொத்த ரேஷன் கார்டுதாரர்களில், சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காதவர்கள் எண்ணிக்கை, 4 லட்சம் தான். இவர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1,000 ரூபாய் வழங்கினால், ஆண்டுக்கு, 40 கோடி ரூபாய் தான் செலவாகும்.
அரிசி கார்டு வைத்திருந்தும், மாதம், 20 லட்சம் பேர் பொருட்கள் வாங்காததால், ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் செலவு மிச்சமாகிறது.
பொங்கல் பரிசு உள்ளிட்ட சலுகைகளை, அரிசி கார்டுக்கு மட்டுமே அறிவிப்பதால், அனைவரும் அரிசி கார்டுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
தற்போது, மகளிர் உரிமைத்தொகை, ரேஷன் கார்டு அடிப்படையில் இல்லாமல், சில தகுதி அடிப்படையில் வழங்கப்படுகிறது.
சலுகைகள்
அதேபோல, அனைத்து வகை கார்டுதாரர்களுக்கும், தகுதிக்கேற்ப அரசு வழங்கும் சலுகைகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தால், அரிசி கார்டு கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை குறையும்.
அதேபோல, அரிசி வாங்க விருப்பம் இல்லாதவர்கள், அரசிடம் தெரிவிக்கலாம். அதனால், மற்ற சலுகைகள் பாதிக்கப்படாது என்று அறிவித்தால், அரிசி கார்டு வைத்திருப்போரும், மற்ற வகை ரேஷன் கார்டுக்கு மாற வாய்ப்புள்ளது.
இதனால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சேமிப்பாகும். இதுபற்றி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
