சாலையோர ஓட்டல் பண்டங்கள் அதிக விலை விற்றால் நடவடிக்கை
சாலையோர ஓட்டல் பண்டங்கள் அதிக விலை விற்றால் நடவடிக்கை
ADDED : ஆக 24, 2011 12:07 AM

சென்னை : ''சாலை ஓரங்களில் உள்ள ஓட்டல்களில், வாட்டர், கூல் டிரிங்ஸ் பாட்டில்கள், எம்.ஆர்.பி., விலைக்கு அதிகமாக விற்பனை செய்தால், நடடிக்கை எடுக்கப்படும்'' என்று, சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தின் போது நன்னிலம் தொகுதி உறுப்பினர் காமராஜ், ''கடந்த ஆட்சியாளர்களின் பினாமிகள், நெடுஞ்சாலை ஓரங்களில் ஓட்டல்கள் நடத்தினர்.
அந்த ஓட்டல்களின் முன் தான், பஸ்சை நிறுத்த வேண்டும் என, கட்டாயப்படுத்தப்பட்டது. தரமற்ற, சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, போக்குவரத்துக் கழகங்களின் மூலம், கூட்டுறவு ஓட்டல்கள் நடத்த, அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வியை எழுப்பினார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துப் பேசியதாவது: நிதிப் பற்றாக்குறையின் காரணமாக, நெடுஞ்சாலைகளில் கூட்டுறவு உணவகங்கள் அமைக்கும் திட்டம் எதுவும், போக்குவரத்துக் கழகங்களிடம் இல்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில், நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள ஓட்டல்களில், கட்டுப்பாடு இல்லாத வகையில், உணவுகள் விற்கும் அவலநிலை இருந்தது. ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில், 8 ரூபாய்க்குத் தான் வாங்குகின்றனர். ஆனால், அதிக விலைக்கு வாட்டர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. வாட்டர் மற்றும் கூல் டிரிங்ஸ் பாட்டில்கள், எம்.ஆர்.பி., விலைக்கு அதிகமாக விற்கப்படும் கடைகள் மீது புகார் தரப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கக் கூடாது என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, அதிக விலைக்கு விற்கும் ஓட்டல்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.