ADDED : ஆக 06, 2025 09:18 PM

தென்காசி: ''சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்பது நிரூபணம் ஆகி விட்டது. நம்மை பாதுகாக்க வேண்டிய போலீசுக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது,'' என்று கடையநல்லுாரில் இபிஎஸ் பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடையநல்லுார் பஸ்ஸ்டாண்ட் அருகே அவர் பேசியதாவது:
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. எஸ்.ஐ.யை வெட்டிக்கொலை செய்துள்ளனர். நமக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? இது சாதாரண விஷயமல்ல, சட்டம் ஒழுங்கு சீர்கேடு நிரூபணம் ஆகிவிட்டது. நம்மை காக்க வேண்டிய போலீஸுக்கே இந்த நிலை. அதுமட்டுமில்லை கோவையில் எஸ்.ஐ அறையில் புகார் கொடுக்க வந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு மோசம் என்பதை உணரவேண்டும்.
காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. இதுக்கெல்லாம் என்ன காரணம்? போதை ஆசாமிகள்தான். கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா அமோக விற்பனை. அதை தடுக்கத் திராணி இல்லாதது, இந்த திமுக அரசு. நான் பல முறை போதை குறித்துப் பேசினேன் அப்போதே முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை தடுத்திருக்கலாம்.
ஆனால் அதற்கு தகுதியில்லாத முதல்வர் நம்மை ஆள்கிறார். தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாகப் போற்றப்பட்டது. அதுவே இன்று இப்படியிருக்கக் காரணம் அரசியல் தலையீடு. போலீஸுக்கே இந்த நிலை என்றால் மக்களை யார் பாதுகாப்பது? நாடு மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. நாட்டைக் காப்பாற்ற தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியமைக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். இன்று சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை.
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.