நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக இம்பீச்மென்ட்; நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்
நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக இம்பீச்மென்ட்; நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்
ADDED : டிச 14, 2025 07:13 AM

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் மூலம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தீர்மானத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என லோக்சபா சபாநாயகருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு மனு அனுப்பினர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்(இம்பீச்மென்ட்) கொண்டுவர தி.மு.க.,-காங்., அடங்கிய 'இண்டி' கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் லோக்சபா சபாயநாகர் ஓம்பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்த பத்மநாபன், பழனிவேல்ராஜன், கதிர்வேலு மற்றும் வழக்கறிஞர் ஆர்.ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 154 வழக்கறிஞர்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு அனுப்பிய மனு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை, தவறானவை. பதவி நீக்க தீர்மானத்தின் தகுதிகளை ஆராய்வதை தவிர்க்கிறோம். நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எம்.பி.,க்களில் ஒரு பிரிவினரின் இத்தகைய முயற்சியானது அரசியலமைப்பு அதிகாரங்களை மீறும் மற்றும் தவறான வகையில் பயன்படுத்தும் வகையில் உள்ளது. அரசியலமைப்பின் விதிகளில் ஒன்றை தன்னிச்சையாக பயன்படுத்துவதன் மூலம், இந்திய நீதித்துறையை சீர்குலைக்கும் முயற்சியாக இப்பதவி நீக்கத் தீர்மானத்தை பார்க்கிறோம்.
நீதிபதி சுவாமிநாதன் 2017 ஜூன் 28 முதல் 2025 நவ.,30 வரை 73 ஆயிரத்து 505 பிரதான வழக்குகள் உட்பட மொத்தம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 426 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். பாரபட்சமின்மை, நேர்மையுடன் தீர்ப்பளித்து சாதனை புரிந்துள்ளார். குறைபாடு இல்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மிக நேர்மை, நாணயம் மற்றும் அறிவார்ந்த நீதிபதிகளில் ஒருவரான சுவாமிநாதன் மீது அரசியல், மத நோக்கிலான காரணங்கள் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ள ஆதாரமற்ற, தவறான குற்றச்சாட்டுகள் குறித்து எங்களின் ஆழ்ந்த கவலையை தெரிவிக்கிறோம். குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு கோட்பாடுகள், குறிப்பாக நீதித்துறையின் சுதந்திரத்தை மீறும் ஒரு முயற்சியாகும்.
பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் என்பது ஜனநாயகத்தின் உன்னத கொள்கைகள், அரசியலமைப்பின் புனிதத்தன்மை மீது நம்பிக்கை இல்லாத சில அரசியல் கட்சிகளின் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை. நீதிபதிக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை ஏற்க வேண்டாம். ஆரம்ப நிலையிலேயே நிராகரித்து, சட்டத்தின் மாண்பை பாதுகாக்க வேண்டுகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

