12 இடங்களில் எலி மருந்து வைத்ததே காரணம்; 2 குழந்தைகள் உயிரிழப்பில் 'பகீர்'
12 இடங்களில் எலி மருந்து வைத்ததே காரணம்; 2 குழந்தைகள் உயிரிழப்பில் 'பகீர்'
ADDED : நவ 15, 2024 02:18 PM

சென்னை: சென்னை குன்றத்தூரில் உள்ள வீட்டில் எலி மருந்து வைத்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வீட்டில் 3 இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் எலி மருந்து வைத்ததே உயிரிழப்புக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.
சென்னை, குன்றத்துார் அருகே, மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கிரிதரன், 34. குன்றத்துாரில் ஒரு தனியார் வங்கி மேலாளர். இவரது வீட்டில், எலிகள் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதை கட்டுப்படுத்த, எலி மருந்து அடிக்கும் தனியார் நிறுவனத்தை, ஆன்லைனில் தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து, நிறுவனம் சார்பாக ஒரு ஊழியர், கிரிதரன் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார். வீட்டின் உட்புறம் அளவுக்கு அதிகமாக மருந்து அடித்து சென்றுள்ளார்.
பின், இரவு உணவு சாப்பிட்டு, மனைவி பவித்ரா, 30, மகள் விஷாலினி, 6, மகன் சாய் சுதர்சன், 1, ஆகியோருடன், கிரிதரன் படுத்து உறங்கினார். நேற்று காலை எழுந்ததும், அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்குடன் மயக்கம் ஏற்பட்டது. பெற்றோர், இரு குழந்தைகள் என, நான்கு பேரும் மீட்கப்பட்டு, குன்றத்துார் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு, மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன் ஆகியோர், சிகிச்சை பலனின்றி இறந்தனர். கிரிதரன், பவித்ரா ஆகியோர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டனர் என டாக்டர்கள் தெரிவித்தனர். குன்றத்துார் போலீசார் விசாரித்து, தி.நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரை கைது செய்தனர். நிறுவன உரிமையாளர் பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், 'வீட்டின் அறையில் 3 இடங்களுக்கு பதிலாக 12 இடங்களில் எலி மருந்து வைத்ததே 2 குழந்தைகள் இறப்புக்கு காரணம்' என்பது தெரியவந்தது. வேளாண் துறையில் கடிதம் கொடுத்துவிட்டு நிறுவனத்திற்கு சீல் வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.