ADDED : பிப் 21, 2024 01:20 PM

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை பிப்.,26ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த 2018, ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவரது மகன் தலைவரானார். கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் சட்டசபை விதி எண் 110ன் கீழ் மெரினா கடற்கரையில் அண்ணாதுரை நினைவிட வளாகத்தில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழக அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நவீன விளக்கப்படங்களுடன் இந்த நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது. இதன் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து வரும் 26ம் தேதி கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

