கோவில் விழாவில் அசம்பாவிதம்: ஹிந்து முன்னணி கண்டனம்
கோவில் விழாவில் அசம்பாவிதம்: ஹிந்து முன்னணி கண்டனம்
ADDED : ஜன 20, 2026 09:57 PM

திருப்பூர்: கோவில் விழாவில் அசம்பாவிதம் நடக்கும் அளவுக்கு அடிப்படை ஏற்பாடுகளில் இந்த அரசு, அலட்சியமாக இருந்துள்ளது என ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம், வாணாபுரம், மணலுார் பேட்டையில் நடந்த ஆற்று திருவிழாவில், ஐந்து லட்சம் மக்கள் கூடியுள்ளனர். அதில், பலுான் காஸ் சிலிண்டர் வெடித்து, பெண் பலியாகி, பலர் காயமடைந்தனர்.
இவ்வளவு மக்கள் கூடும் இடத்தில் பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற அடிப்படை ஏற்பாடுகளில் இந்த அரசு, அலட்சியமாக இருந்துள்ளது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு முன்னேற்பாடு எவ்வாறு செய்ய வேண்டும் என்பதில், இன்னமும் தமிழக அரசு திறமையற்றதாக இருக்கிறது. இந்தாண்டு ஹிந்து அறநிலையத்துறை அலட்சியம் காட்டியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான அளவு இல்லை என்பதே வேதனையான உண்மை.
தமிழக காவல்துறை பாதுகாப்பு ஏற்பாட்டில் கவனம் செலுத்த தவறுகிறது.பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு உடனடியாக சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும். அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

