ரூ.500 நோட்டு புழக்கம் அதிகரிப்பு: ரூ.100, 200க்கு தட்டுப்பாடு
ரூ.500 நோட்டு புழக்கம் அதிகரிப்பு: ரூ.100, 200க்கு தட்டுப்பாடு
UPDATED : ஜன 20, 2026 06:42 AM
ADDED : ஜன 20, 2026 06:37 AM

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசில் வழங்கப்பட்ட, 3,000 ரூபாய் ரொக்கத்தால், 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா, 3,000 ரூபாய் ரொக்கத்தை, தமிழக அரசு வழங்கியது. இந்த பணம் ஒருவருக்கு, 500 ரூபாய் நோட்டு வீதம், ஆறு நோட்டுகளாக வழங்கப்பட்டன.
திணறல்
அதன்படி, 2.15 கோடி கார்டுதாரர்களுக்கு, 6,453 கோடி ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்பட்டு உள்ளன. தற்போது பலரும், 500 ரூபாய் நோட்டை தங்கள் ஊர்களில் உள்ள கடைகளில் வழங்கி, பொருட்களை வாங்குகின்றனர்.
ஒரே சமயத்தில் பலரும், 500 ரூபாய் நோட்டு களை மாற்றுவதால், அதற்கு சில்லரை வழங்க முடியாமல், வணிகர்கள் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து, வணிகர்கள் கூறியதாவது:
ஒரு மளிகை கடையில் தினமும் சராசரியாக, 5,000 - 10,000 ரூபாய் வியாபாரம் நடக்கும். மொத்தம், 100 பேர் கடைக்கு வந்தால், 20 பேர் 500 ரூபாய் நோட்டுகள் தருவர். மற்றவர்கள், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் வழங்குவர்.
சில்லரை தட்டுப்பாடு இதனால், சில்லரை தட்டுப்பாடு ஏற்படாது. தற்போது கடைக்கு வருவோரில், 90 - 95 சதவீதம் பேர், 500 ரூபாய் நோட்டுகளை தான் தருகின்றனர். இதனால், சிலருக்கு தான் சில்லரை தர முடிகிறது; மற்றவர்களுக்கு தர முடிவதில்லை.
ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுபவர்களும் தங்கள் வண்டியில் பயணம் செய்தவர்கள் வழங்கும், 500 ரூபாய் நோட்டை கடையில் தந்து, சில்லரை கேட்கின்றனர். சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொங்கல் பரிசில், 3,000 ரூபாய் வழங் கியதால், 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

