ADDED : ஜன 22, 2024 01:58 AM

சென்னை: ''கொரோனா பெருந் தொற்றுக்கு பின் மக்களிடையே நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் அதிகரித்துஉள்ளன,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை சார்பில், சர்வதேச மருத்துவ கருத்தரங்கு, சென்னையில் 19ம் தேதி துவங்கியது.
பாடம் கற்றோம்
மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, பொது சுகாதாரத்துறை இயக்கு னர் செல்வவிநாயகம் பேசியதாவது:
கொரோனா தொற்றுக்கு பின், பல்வேறு பாடங்களை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை கற்று உள்ளது.
பெருந்தொற்று காலத்தில், கொரோனா அல்லாத பிற மருத்துவ சேவைகளையும், தடையின்றி வழங்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டோம்.
ஏனெனில், அந்த காலகட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. அப்போது, பிற தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள் தடைபட்டன.
இதனால், இணை நோய்களின் தாக்கம் அதிகரித்தது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட வர்கள், நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டனர்.
தற்போது, ஜெ.என்.1 போன்ற உருமாற்றமடைந்த கொரோனா தொற்று பரவி வருகிறது. மிதமான பாதிப்பை உருவாக்கும் இந்த வகை கொரோனா வீரியமானது இல்லை.
ஒருவேளை, இனி வரும் காலங்களில், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் பரவினால், அதை தற்போது உள்ள தடுப்பூசிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியாது. அதற்கென புதிய தடுப்பூசிகளை கண்டறிய வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாணவர்களுக்கு சலுகை
சென்னையில் நடந்த தேசிய மருத்துவ மாநாட்டில், மருத்துவம் மற்றும் பிற படிப்புகளில், 7.5 சதவீத அரசு பள்ளி ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் பெற்ற 2,192 மாணவர்களும் பங்கேற்றனர்.
அவர்களுக்கு, 1,000 ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு தரப்பட்டது என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, இத்தகைய சலுகை வழங்கப்பட்டுள்ளது.